ஆசிரியர்களுக்கு செல்லுபடியாகாது - கல்வியமைச்சு வட்டாரங்கள் தகவல்
எதிர்வரும் 2ம் திகதி முதல் அரச நிறுவனங்களை வழமை போன்று செயற்பட அறிவித்துள்ள அரசாங்கம் அனைத்து அரச சேவை ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்தை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் ஆசிரியர்களுக்கு செலுபடியாகாது என கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச சேவை நாளை மறுதினம் (02) முதல் வழமைக்கு திரும்புகின்ற போதிலும், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, ஆசிரியர்கள் சேவைக்கு அழைக்கப்படவில்லை.
பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை, கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட பின்னரே, ஆசிரியர்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான உரிய சுகாதார வழிகாட்டி, சுகாதார சேவை பணிப்பாளரினால் இதுவரை வெளியிடப்படவில்லை.
சுகாதார சேவை பணிப்பாளரின் அனுமதி கிடைத்ததன் பின்னரே, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.