கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு
தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகார பகிர்வான 13 ஆவது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தை நடத்திய நிலையில், மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாதென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரை மீதான இன்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தரப்பில் விமர்சனம்

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களை பகிர்வதற்கு கூட முன்னாள் அதிபர் தயாராக இல்லையென்பது புலப்படுவதாக தமிழர் தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையில் சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்ய முடியாதென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பௌத்த பிக்குகள் எதிர்க்கும் விடயமான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாது.
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிரதிநிதிகள் கடும்போக்கை விட்டு நடுநிலையில் நின்று செயற்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இரு பிரிவினராக பிரிந்து எம்மால் செயற்பட முடியாது. இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
சமஷ்டி

சமஷ்டியை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் அறிவு சார்ந்த ரீதியில் நடந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகளை அனைவரும் கலந்துரையாடி தீர்க்க வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முடியாத ஒன்று இல்லை.
இலங்கையின் நெருக்கடி நிலையை மேலும் மோசமடைய செய்யும் வகையில் நாம் செயற்பட கூடாது” - என்றார்.