வெளிநாடு செல்லவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு
வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்வோர், தாம் வெளிநாடுகளுக்கு செல்லும் ஆவணங்களை காண்பித்து, அதனை உறுதிப்படுத்தும் பட்சத்தில், அந்த நாடு ஏற்றுக்கொள்ளும் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன (Asela Gunawardena) உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கொவிட் மற்றும் டெங்கு பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.
