மக்களின் காணிகளை இராணுவத்திற்கு தாரைவார்க்க முயற்சிக்கும் NPP : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மும்மரமாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞசாட்டியுள்ளார்.
நேற்று (21) குறித்த தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய வந்தமை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தனியாருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் அடாத்தாக இராணுவ முகாம் அமைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த இராணுவ முகாம் உள்ள பகுதியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்களம் வருகை தந்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றனர்.
மக்களின் காணிகளை அபகரித்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த தீர்மானத்தை மீறி காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் அடாத்தாக இராணுவ தேவைக்காக மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது.
வட-கிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இராணுவ மயமாக்கல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வரவு - செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்காக தொடர்ந்து அதிகரித்த நிதி ஒதுக்கீடு இடம்பெறுகிறது.
இராணுவ வைத்தியசாலை
குறிப்பாக வடகிழக்கில் இராணுவ இருப்பை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு அதிக நிதியை செலவு செய்கிறது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவ வைத்தியசாலை தனியார் காணிகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு என யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கூறும் ஜனாதிபதி மக்களின் காணிகளை மக்களுக்கு தெரியாமல் அபகரிப்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |