வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தில் இணையும் தேசிய சேமிப்பு வங்கி
க..பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தும், அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தில், தேசிய சேமிப்பு வங்கியையும் (NSB) இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகக் கடமையாற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அரச பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரச சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த வட்டியில்லாத கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இரண்டு வங்கிகள்
தற்போது மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய வங்கிகள் மூலமாகவே இக்கடன் திட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கடன் திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ், சுமார் 7,000 மாணவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள வங்கி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், தேசிய சேமிப்பு வங்கியையும் இத்திட்டத்துடன் இணைப்பதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |