நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் கனமழை: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரமாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியான மழையால் மலையகத்தின் பிரதான வீதிகள் பல மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் கனமழை
குறிப்பாக நோர்வூட், ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.

மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்படி, அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதியின் 32 கி.மீ மற்றும் 66 கி.மீ பகுதிகள், நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதி, தண்டகல - பலம்பிட்டிய - தொலஸ்பாகே வீதி உட்பட 8 பிரதான வீதிகள் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையால் முற்றாக மூடப்பட்டுள்ளன.
இதனால் நுவரெலியா மாவட்டத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்
கனமழை காரணமாக காசல்ரீ, மௌஸ்ஸாகலை, கொத்மலை ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழ்ப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவிக்கையில், "அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 24 மணிநேரத்திற்கும் நுவரெலியா மாவட்டத்தில் 100 மி.மீக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறியுள்ளது.
இதனால் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |