ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் பிரித்தானிய ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஒமிக்ரோன் வைரஸ் காற்றின் மூலம் பெருமளவில் பரவக்கூடும் என பிரித்தானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களிலேயே இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரோன் வைரஸ் கவனம் செலுத்தவேண்டிய ஒரு வைரஸ் தான் என்று கூறுகிறது.
ஆனால் தென்னாப்பிரிக்கா மருத்துவர்கள், இதுவரை இவ்வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள். எனவே இந்த வைரஸ் குறித்து பல விடயங்கள் இன்னமும் சரியாக தெரியாத நிலையில், அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஆய்வு மேற்கொண்ட பிரித்தானிய அறிவியலாளர்கள், ஒமிக்ரோன் வைரஸ், காற்றின் மூலம் பெருமளவில் பரவக்கூடும்’ என தெரிவித்துள்ளார்கள். ஆனாலும், இந்த முடிவுகள் ஆரம்பகட்ட முடிவுகளே என்றும், இந்த தகவலை உறுதி செய்ய இன்னமும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா, மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் கட்டுப்பாட்டை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.