நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றின் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன (Dhammika Wimalaratne) தெரிவித்தார்.
அத்துடன் நாப்தாவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளும் ஏப்ரல் 12 ஆம் திகதி காலை நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்கள்
அதற்கமைய, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்த மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயற்பாட்டில் இல்லை என்றும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான சமநிலையை நிர்வகிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபை விளக்கமளித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை மற்றும் செயற்பாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஏப்ரல் விடுமுறை நாட்களில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மின்சார சபை, மின் பயன்பாடு அதிகமாக இல்லாத சந்தர்ப்பங்களில், மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
சூரிய மின்சக்தி
ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல், நாட்டின் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.
மேலும் 100 கிலோவோட்டிற்கு மேல் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை தற்காலிகமாக மின்சார கட்டமைப்பில் இருந்து துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மின்சார தேவை மேலும் குறைந்ததால், ஏப்ரல் 13ஆம் திகதி முதல் சூரிய மின்சக்தி கலன்களின் உரிமையாளர்களுக்கு பகலில் தங்கள் சூரிய மின்சக்தி கலன்களை இயக்குவதை நிறுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு முக்கிய படியாக இது இருப்பதாக மின்சார சபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
