மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர்
தமிழகத்தில் மாணவர்களிடையே சாதி, இன மோதல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு நபர் குழு அமைத்துள்ளது.
தமிழகம் நாங்குநேரியில் சாதி அடிப்படையில் பாடசாலை மாணவர் ஒருவர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இந்தக் குழுவை நியமித்துள்ளார்.
நடந்த சம்பவம்

தமிழகம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பாடசாலை மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் உட்பட உலகத் தமிழர்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இதன்போது மாணவன் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் நெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன வேறுபாடு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று தெரிவித்த அவர், இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய பிரச்சினை என்பதால், இதில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப்பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேற்படி இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகளைப் பெற்று தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த அறிக்கை மூலம் வினைத்திறனான நடவடிக்கைகளை அரசால் மேற்கொள்ள முடியும் என மேலும் அவர் தெரிவித்தார்.