நாடளாவிய ரீதியில் திடீர் சோதனை நடவடிக்கை - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்றைய தினமும் நாடுமுழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 73,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
தேடுதல் நடவடிக்கை
இதன்போது, 24,690 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், 9,717 வாகனங்கள் மற்றும் 7,637 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 461 கிராம் 866 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 401 கிராம் 416 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 20 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 02 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த விசேட சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 367 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
