திவால்நிலைக்கான காரணங்களை விசாரிக்க புதிய குழு
நாடு வங்குரோத்தாவதற்கான காரணங்களைத் தேடும் போலியான குழுவுக்குப் பதிலாக மக்கள் சார்பு எதிர்க்கட்சியிலிருந்து ஒரு உண்மையான மாற்றுக் குழுவை நியமிக்க எதிர்க்கட்சி சார்பு கூட்டணி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டை வங்குரோத்தாக்கி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா முதலில் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
பல மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த மக்கள் சார்பு பிரேரணைக்கு நேர்மையான அல்லது சாதகமான பதிலை வழங்காத மானங்கெட்ட அரசாங்கம் வழமை போன்று நிழல் பெரும்பான்மையுடன் தெரிவுக்குழுவொன்றை விருப்பத்துக்கு ஏற்றவாறு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
தெரிவுக் குழுவில் இருந்து விலகல்

அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த இருபத்தியோராம் அரசியலமைப்புத் திருத்தம், இளைஞர் பிரதிநிதித்துவ விஸ்தரிப்பு, மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டம் போன்ற மக்கள் சார்பு பிரேரணைகளை மறைத்து அரசாங்கம் தனது முட்டாள்தனமான அரசியல் இலக்குகளைப் பாதுகாப்பதற்காகச் செயற்பட்டதைப் போலவே இந்தப் பிரேரணையையும் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைவதற்கு பயன்படுத்தும் தந்திரமான உத்தியாகக் கொண்டு செயற்படுகின்றது.
அரசாங்கம் முன்மொழிந்த தெரிவுக்குழுவின் கட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் என்பதோடு அவர் நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது அதிகாரத்தில் இருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகமும் ஆவார்.
அவ்வாறான ஒருவரை நியமித்தமை பற்றி ஆராயும் போது அரசாங்கத்தின் போக்கு தெளிவாகிறது.
நாட்டில் நடந்த பொருளாதாரக் குற்றத்துக்கு காரணமானவர்களையே அது பற்றி ஆராய்வதற்கு நியமிப்பதாவது,திருடனிடமே திருட்டுப்போன பொருளைக் கேட்பது போன்றதாகும்.
இந்தத் தெரிவுக் குழுவின் முக்கிய நோக்கம் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு காரணமானவர்களை நிரபராதிகளாக்குவது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறானதொரு தெரிவுக்குழுவில் பணிபுரிவது நேரத்தை வீணடிக்கும் வீண் செயல் என்பதுடன் நாட்டின் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இழைக்கும் துரோகச் செயலாகும்.
இந்த உண்மைகள் காரணமாக இந்தத் தெரிவுக் குழுவில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி விலகுவது என்று முடிவு செய்துள்ளது.
உண்மையான மாற்றுக் குழு

மேலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பு கூட்டணியின் செயற்குழு எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய விவகாரங்கள் மற்றும் அதற்கு பொறுப்பானவர்கள் குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சி நியமித்துள்ள இந்தக் குழு பொருளாதார அழிவுக்கு காரணமான அனைத்து தரப்பினரையும் முறைப்படி விசாரித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்.
இந்தக் குழுவின் செயற்பாட்டிற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வெளித்தெரியும் வண்ணம் தனது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க முடியும் என்பதுடன் இதற்கான தகவல்களைப் பெற வேண்டிய ஒவ்வொரு தரப்பினரிடமிருந்தும் தகவல்களைப் பெற இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்.
மேலும் இது குறித்து தகவல் தரக்கூடிய எவருக்கும் தகவல் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
எதிர்க்கட்சியினால் நியமிக்கப்படும் இந்தக் குழுவின் ஊடாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வோடு நாட்டை வங்குரோத்தாக்கியவர்களை இனங்கண்டு அவர்கள் செய்த மோசடி மற்றும் ஊழல் அத்துடன் தன்னிச்சையாக மேற்கொண்ட தவறான முடிவுகளால் இழந்த பொதுச் சொத்துக்கள் மற்றும் ஆதனங்களின் அளவை துல்லியமாக மதிப்பிடுவதற்கும் அவ்வாறு இழந்த பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மற்றும் பொறுப்புக் கூறலில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் தவறிய அனைவருக்கும் எதிராக எடுக்க வேண்டிய உரிய சட்ட நடவடிக்கை குறித்து பரிந்துரைக்கவும் உத்தேசித்துள்ளேன்” - என்றுள்ளது.