மகிந்த பதவி விலகினால் நாமல் எதிர்க்கட்சி தலைவர்! கோட்டாபயவிடம் சென்ற பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என குறித்த குழுவினர் கோட்டாபயவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் 100க்கும் மேற்பட்ட, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாமலுடன் எதிர்க்கட்சியில் இணைந்து நாமலை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட அரச தலைவர் என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக கோட்டாபய அறிவித்துள்ளார்.
அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.