P2P போராட்டம்- மற்றுமொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் விசாரணைக்குள்!
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தல் தனக்கு கிடைத்துள்ளதாக மனோ கணேஷன் தனது முகநூல் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அவரது வீட்டிற்கு சென்றே பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்த கொண்டமை தொடர்பில் வாக்கு மூலமும் பெற்றுள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாக தெரிவித்தே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸார், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை பெப்ரவரி 6 ஆம் திகதி மனோகணேசன் மீறியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் போது எழுத்து மூலமாக, ஸ்ரீலங்கா பொலீஸாருக்கு தான் கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும், தமிழ் பேசும் மக்களின் தார்மீக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், இவ்வாறான தடையுத்தரவுகள் எதுவும் எம்மைக் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பித்த போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளும், பொலிஸாரும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அனைத்து தடைகளையும் தகர்த்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பேரணி பொலிகண்டியில் வெற்றிகரமாக முடிவுற்றது.
இந்நிலையில் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது பொலிஸார் விசாரணைக்கான அழைப்பாணைகளை அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனுக்கு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
you may like this