ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய மேடையொன்றில் எதிரொலித்த குரல்
ஈழத்தில் எமது தமிழ் உறவுகள் எதிர்நோக்கிய வலிகளை வெளிப்படுத்தும் வகையில் வன்னிக்காடு படைப்பினை உருவாக்குவது எனது இலட்சியம் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
ஈழத்து கலைஞர்களின் தீப்பந்தம் திரைப்பட விழாவானது அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அங்கு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நடைபெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இன்றைய இளைய தலைமுறைகள் இந்த யுத்தத்தை, இந்தப் பேரு இழப்பை மறந்து மயக்க நிலையில் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மட்டும் இதற்கு காரணம் அல்ல அங்கு ஆட்சி செய்கின்ற அதிகார வர்க்கமும் இதற்கு காரணம்.
உறவுகள் பட்ட வலிகள்
போதை, சினிமா என்பவற்றுக்குள் சிக்கியுள்ளது இளைஞர் சமுதாயம். இரத்த அபிஷேகம் நடைபெற்ற மண்ணில் அஜித் விஜய் உட்பட்ட திரையுலக பிரபலங்களின் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற நிலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் நோக்குடன் தான் அங்கு இருக்கின்ற எமது பிள்ளைகள் தீப்பந்தம் என்ற ஒரு அரிய படைப்பினை உருவாக்கியுள்ளார்கள். இனி வருகின்ற தலைமுறையாவது நாங்கள் எவற்றை எல்லாம் இழந்து இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த படைப்பு மூலம் வெளிக்கொணர தொடங்கி இருக்கின்றார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள படைப்பாளிகளுடன் இணைந்து, தொப்புள்கொடி உறவுகளுடன் இதனை பகிர்ந்து இந்த சூழ்நிலையிலும் எங்கள் மண்ணை, எங்கள் இனத்தை தங்களுடைய உரிமையை கைவிட்டு விடாதீர்கள், எங்களுடன் நில்லுங்கள் என்று உயிரால் உயில் எழுதி தீப்பந்தமாக இங்கே ஏற்றி இருக்கின்றார்கள்.
எனது வாழ்க்கையில் சந்தனக்காடு படைப்பை உருவாக்கி விட்டேன். முந்திரி காடு படைப்பில் தமிழரசனின் வரலாறு உள்ளது. அடுத்ததாக எமது வன்னியில் எமது உறவுகள் பட்ட வலிகளை வெளிப்படுத்தும் வகையில் வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு.
இந்த உலகம் தலைகுனிய தலைகுனிய, கதறியழ அழ, இந்திய தேசம் உட்பட எமதுமக்களை அழிப்பதற்கு காரணமான அதிகார வர்க்கங்கள் கல்லறையில் இருந்தாலும் அவர்களை தோண்டி எடுத்து துப்புகின்ற படைப்புகளாக என் இனத்தின் படைப்புகளை படைத்த பின்னர் தான் என் தலை சாயும்.
ஈழத் தமிழ் உறவுகளின் விடிவு
இதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு மூன்று தடவை செல்லும் போதும், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போதும், கனடா, லண்டன் போன்ற புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களுக்கு செல்கின்ற போதும் மீதம் இருக்கின்ற போர்வீரர்களையும், தளபதிகளையும் சந்திக்கும் போது அந்த வரலாறுகளைக் கேட்கும் ஆன்மா வரைக்கும் சிலிர்க்கின்றது.
70ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தரப்படுத்தல் என்கின்ற வரையறை மூலம் கல்வி வரையறை செய்யப்பட்டது.
சிங்களவர் குறைந்த மதிப்பெண்களை பெற்றால் அவர்கள் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதற்கு செல்லலாம். ஆனால் தமிழர்கள் எழுவது மதிப்பெண்கள் எடுத்தால் கூட அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடையாது.
கல்வி உரிமை மறுக்கப்பட்டால் வேலை உரிமை மறுக்கப்படும். கல்வியும், வேலையும் மறுக்கப்பட்டால் வாழ்வியல் உரிமை என்பது கிடையாது. நிலமும் கிடையாது. கலை, கலாசாரம், பண்பாடு என அனைத்தும் அளிக்கப்படும். இதனால்தான் தமிழினம் போராடியது.
இதன் பிரதிபலிப்பாக தன் யாழ். நூலக எரிப்பு இடம்பெற்றது. அறிவை மறைப்பது என்பது, அறிவை மறுப்பது என்பது, அறிவை இல்லாமல் செய்வது என்பது ஒரு இனத்தை அழிப்பதற்கு சமமானது.
ஈழத் தமிழ் உறவுகளின் விடிவுக்காக எமது குரல் தொடர்ந்து ஒலித்துக் கண்டே இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
