இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் - கசிந்தது விவாதங்களின் விபரம்!
ஆறு அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை துடுப்பாட்ட போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய துடுப்பாட்ட வாரிய செயலாளரும், ஆசிய துடுப்பாட்ட சம்மேளன தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
ஆசிய கோப்பை
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய துடுப்பாட்ட சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
போட்டி இடம்பெறும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே ஆசிய துடுப்பாட்ட சம்மேளனம் கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் கசிந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர்
ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பிடம் ஆலோசித்த பிறகே அந்த நாட்டு துடுப்பாட்ட வாரிய தலைவர் நஜம் சேத்தி ஆசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவர், 'ஆசிய கோப்பை துடுப்பாட்ட பல நாடுகள் பங்கேற்கும் போட்டி. இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆர்வமுடன் உள்ளது.
எனவே இந்திய துடுப்பாட்ட வாரியம் பாகிஸ்தானுக்கு அணியை அனுப்பமாட்டேன் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்திய துடுப்பாட்ட வாரியம் அனுமதி பெறாவிட்டால், பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக (ஒக்டோபர்-நவம்பர்) இந்தியாவுக்கு செல்லாது' என்று நஜம் சேத்தி, இந்திய துடுப்பாட்ட வாரிய செயலாளர் ஜெய் ஷாவிடம் உறுதிப்பட கூறியிருக்கிறார்.
மிரட்டல்
மேலும் நஜம் சேத்தி ஆசிய துடுப்பாட்ட சம்மேளன உறுப்பினர்களிடம், 'அடுத்த கூட்டத்திற்கு முன்பாக இந்திய துடுப்பாட்ட வாரியம் தங்களது அரசிடம் பேசி ஆசிய கோப்பை போட்டிக்கு அணியை அனுப்புவது குறித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
அப்போது தான் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து நாங்கள் ஐ.சி.சி.யிடம் விவாதிக்க முடியும்' என்றும் கூறியிருக்கிறார்.
2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை துடுப்பாட்ட மற்றும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போது, அந்த சமயத்தில் இந்திய துடுப்பாட்ட வாரிய பிரதிநிதிகள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நஜம் சேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
முந்தைய பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் என்று மிரட்டல் விடுத்தார். அதே பாணியை நஜம் சேத்தியும் இப்போது தொடருகிறார் என கூறப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்