எட்டு யூடியூப் தளங்கள் முடக்கம்! இந்திய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை கொண்ட எட்டு யூடியூப் தளங்களை இந்திய மத்திய அரசு இன்று முடக்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் 2021ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உண்மைக்கு புறம்பான தகவல்கள்
தடைசெய்யப்பட்ட யூடியூப் தளங்களில் இந்திய அரசின் மதக் கட்டமைப்புகளை சிதைத்தல், இந்தியாவில் மதப் போரைப் பிரகடனம் செய்தல் போன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுவந்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
மேலும், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பல்வேறு விடயங்களில் போலி செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் ஈட்டியுள்ள யூடியூப் தளங்கள்
அதேவேளை, "குறித்த யூடியூப் தளங்களில் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் உள்ளடக்கம் முற்றிலும் தவறானது" என்றும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட யூடியூப் தளங்கள் உள்ளடக்கம் ஊடாக பணமும் ஈட்டப்பட்டு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.