விடுதலைப் புலிகள் செய்த குற்றங்கள் தவறவிடப்பட்டுள்ளன - ஐ.நா பேரவையில் பாகிஸ்தான் அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தில் “இலங்கை மக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களைக் கண்டிக்கத் தவறிவிட்டது” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐ.நா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வாக்கெடுப்புக்கு முன்னர் உரையாற்றும் போது பாக்கிஸ்தானிய பிரதிநிதி இதை கூறினார். மேலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள், ஆதரவாளர்கள் மற்றும் அதன் நிதியாளர்களின் பொறுப்புக்கூறலுக்கான அழைப்பிலிருந்து தீர்மானம் விலகியதாகக் கூறினார்.
மேலும், இலங்கை மக்களின் காயங்களை குணப்படுத்துவதை விட, துன்பங்களை மீண்டும் எழுப்புவதாக வரைவுத் தீர்மானம் தோன்றுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினர்.