'பண்டோரா’ ஆவணம்- மீண்டும் விசாரணை வளையத்திற்குள் திருக்குமார் நடேசன்; களமிறங்கியது வருமான வரித் திணைக்களம்!
உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் சிறிலங்கா தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனிடையே சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின்(Nirupama Rajabaksha) கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசன்(Thirukumar Nadesan) மீது இரண்டாம்கட்ட விசாரணைக்கான அழைப்பை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், கோட்டாபய ராஜபக்ஷவின்(Gotabaya Rajabaksha) சகோதரியுமான நிரூபமா ராஜபக்ஷவும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் பெயரும் அண்மையில் வெளிவந்த பன்டோரா ஆவணத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இதுகுறித்த விசாரணைகளை கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஆரம்பித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, திருக்குமார் நடேசனிடம் கடந்த வாரம் மூன்று மணிநேர விசாரணையை நடத்தியிருந்தது.
இந்த நிலையில் நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு வரும்படி தொழிலதிபர் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பன்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தி, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய சிறிலங்காவின் வருமான வரித்திணைக்களத்தால் புறம்பான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பன்டோரா ஆவணம் தொடர்பில் தற்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதனிடையே விசாரணைகளை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு கோட்டாபயவால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.