நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல் - கூட்டமைப்பு பதிலடி (காணொளி)
சார்ள்ஸ் நிர்மலநாதன்
03.50 PM
நாடாளுமன்றத்தில் இன்று காலை உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைப்படி, அவரை ஒரு மன நோயாளியாகப் பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் உரையாற்றிய அவர், “ஏனென்றால் தமிழர்களுடைய வரலாறு தெரியாமல், தமிழர்களுடைய இருப்புத் தெரியாமல் அவர் சம்பந்தம் இல்லாமல் பேசியிருக்கிறார்.
ஒரு மன நோயாளி பேசும் வசனங்கள் எப்படி அமையமோ? அப்படியான வசனங்களை இனவாதத்துடன் இந்தச் சபையிலே அவர் தெரிவித்திருக்கிறார்.
அவரின் இந்தக் கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவருடைய கருத்தில் ஒரு அச்சுறுத்தலும் இருக்கிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வந்து செல்வது என்பதைப் பற்றியும் அச்சுறுத்தலான வசனத்தை பாவித்து இருக்கிறார். அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் அவருடைய கருத்துக்கு பதில் சொல்லவேண்டும் என்பதால் தான் இந்த விடயத்தை இந்தச் சபையிலே தெரித்துககொள்ள விரும்புகிறேன்” என்றார்.
இன்றைய அமர்வு
சஜித் பிரேமதாச
12.11 PM
நாம் அனைவரும் கைகோரத்து, ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் உரையாற்றிய அவர், இன்று அதீத பண வீக்கம் காணப்படுகிறது. வாழ்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து மக்களது கொள்வனவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எரிபொருள் விலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக போசாக்கின்மை மேலும் அதிகரித்துச் செல்கிறது. இதனால், தேசிய உற்பத்திக்கான அம்சங்களும் வீழ்ச்சி அடையும்” என்றார்.
மகிந்த அமரவீர
11.45 AM
கட்சி பேதமின்றி நாடாளுமன்றில் இருக்கின்ற 225 உறுப்பினர்களும் தத்தமது பிரதேச சபை ரீதியாக உணவு உற்பத்திக்கான பொறுப்பை ஏற்கவேண்டுமென விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான பூரண ஆதரவை அரசாங்கம் என்ற வகையில் தாம் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று இடம்பெறும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முதலாம் இணைப்பு
10.20 AM
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று (07) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 வரை, "இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
