சஜித்தை ஓரங்கட்டி அரச தலைவராக முயற்சி - விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு
எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை ஓரங்கட்டிவிட்டு அரச தலைவராவதற்கான முயற்சிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கொண்டு வருகிறார் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் பேசிய அவர்,
"விவசாயத்துறை அமைச்சினால் யூரியா நனோ திரவ உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்திருந்ததாகவும், அதன் லீற்றர் ஒன்றின் விலை 5 டொலர் ஆயினும், விவசாயத்துறை அமைச்சர் அதனை 25 டொலருக்கு கொண்டு வந்துள்ளார்.
இவற்றுக்கு மஹிந்தானந்த அளுத்கமகேவும், ஷஷீந்திரராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டுமென பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
நாம் யூரியா நைட்ரிஜன் திரவ உரத்தையே இறக்குமதி செய்திருந்தோம். எங்களுக்கு யூரியா நனோ திரவ உரத்தை கொண்டு வர முடியாது. இந்த மோசடியில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
அதற்காகவே, நான் இது தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிடுவதையே அவர்கள் அனைவரும் செய்து வருகின்றனர்.
ஆகவே, நான் ஏதேனும் மோசடி செய்திருந்தால் அது தொடர்பிலான சாட்சியங்களை சி.ஐ.டி.க்கு ஒப்படையுங்கள்.குற்றம் செய்திருந்தால் தண்டனை அனுபவிக்க நான் தயார்.
ஆனால், அவர் அது தொடர்பிலான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.