பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
முழுமையான ஆதரவு
இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.

இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |