பாடசாலை மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
பாடசாலை மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் ஒழுக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கும் சிறப்பு சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களுக்கு வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு
இது தொடர்பில் நேற்று (29.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
“முன்மொழியப்பட்ட சட்டமூலம் காரணமாக ஆசிரியர் - அதிபர் சமூகம் பல சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இதன் காரணமாக கல்வி அமைச்சு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
வெவ்வேறு வழிகளில் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்கள் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
புதிய சட்டம்
ஒரு பாடசாலையின் நிலையான ஒழுக்காற்று முறை அந்தப் பாடசாலையின் தனித்துவமான துணை கலாசாரம் என்பதாகும்.
இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, மாணவர்களுக்கு வரம்பற்ற சுதந்திரம் கிடைக்கும் அபாயம் காணப்படும்.
இந்நிலையில் இதன் இறுதி விளைவு பெற்றோருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ கீழ்ப்படியாத ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்க கூடும்.
மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்பார்க்காத ஒரு விளைவாக கூட இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
