சிறிலங்காவின் அரச தலைவராகிறாரா நாமல்? அவரே வெளியிட்ட தகவல்
அமைச்சர்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்று (20) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது ஆளும் கட்சிக் கூட்டத்திலோ மாத்திரம் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கே. நீங்கள் நாட்டின் அரச தலைவராகப் போகிறீர்கள் என்று உங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதே?
“இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவராக ஆட்சி செய்ய எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அரச தலைவரை தெரிவு செய்தால் அவரின் கொள்கையை பின்பற்ற வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் தனித்தனியாக ஆட்சி செய்ய முயலாமல் மக்களை நல்ல நிலையில் வாழ வைப்பதற்கு நாம் அனைவரும் முயற்சிப்பது நல்லது.
ஏனென்றால் உலகளாவிய தொற்றுநோய் உள்ளது. அந்த தொற்றுநோய் இலங்கையை பாதித்துள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நாட்டின் அரச தலைவராவதற்கு போராடுவதை விடுத்து, மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களே அரச தலைவராக்குவார்கள் என நினைக்கின்றேன். எனவே, தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்ற தலையிடுவது நல்லது எனத் தெரிவித்தார்.