நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு எதிராக அணி திரண்ட மக்கள்
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ”உங்கள் எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப் பொருளினை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த விழிப்புணர்வு பேரணியானது முல்லைத்தீவு மகா வித்தியாலத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் சென்று நிறைவடைந்தது.
பதாதைகளை தாங்கியிருந்தனர்
இதன்போது எவ்வளவு குளித்தாலும் சிகரட் நாத்தம் போகாது, வேண்டாம் வேண்டாம் உயிர்க்கொல்லி போதை வேண்டாம், போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் எதிர்ப்போம் எதிர்ப்போம் போதைப்பொருளை எதிர்ப்போம், அழிக்காதே அழிக்காதே இளைஞர்களை அழிக்காதே , இன்றைய இளைஞர்கள் நளைய தலைவர்கள், என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் ஈடுபட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஐயாத்துரை தவேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிர்வாக பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடக்கு மாகாண பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், முல்லைத்தீவு மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், நிறுவன பணியாளர்கள், இளைஞர் கழக மாவட்ட மற்றும் பிரதேச சம்மேளன பிரதிநிதிதிகள் மற்றும் இளைஞர் யுகதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் - தவசீலன்
யாழில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
இதேவேளை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண பிரதி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக முனியப்பர் கோவில் முன்றலில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து போதை விழிப்புணர்வு நடை பவனி முனியப்பர் கோவிலடியிலிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் சந்திரசேகர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, கிளீன் சிறிலங்கா பணிப்பாளர் கபிலன், இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் - லின்ரன்
வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி
எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் குறித்த நடைப்பயணம் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இவ் நடைபயணம் பழைய பேருந்து நிலையப்பகுதி வரை ஊர்வலமாக சென்றிருந்தது.
குறித்த நடைபயணத்தில் இளைஞர், யுவதிகள் என பலர் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பாவனைக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கபில்
கல்முனையில் விழிப்புணர்வு பேரணி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி இன்று (23) கல்முனையில் நடைபெற்றது.
“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக ஊர்வலமாகச் சென்று கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
செய்தி - உமார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |