காணி உறுதிகளுடன் போராட்டத்தில் குதித்த வலிவடக்கு மக்கள்
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது காணி தொடர்பில் இன்றுடன் நான்காவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அமைதி வழியில் தொடரும் போராட்டம்
காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மத குருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்த அரசாங்கங்கள்
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.
ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை!
தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலை
பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கத்தின் காலத்திலும் தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











