நாங்கள் வாழ்வதில் பயனில்லை! கிவுல் ஓயா அபாயத்தில் முல்லைத்தீவு மக்கள்
கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலையே உருவாகும் என முல்லைத்தீவு எல்லை க் கிராமத்தை சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
வாழ்வாதார நிலங்கள்
இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்,

''1984 ஆம் ஆண்டு எமது பிரதேசங்களை விட்டு நாங்கள் வெளியேறி வெளி மாவட்டங்களில் வாழ்ந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்தபோது நாங்கள் விவசாயம் செய்த ஐந்து குள கா ணிகள் முற்றுமுழுதாக பறிக்கப்பட்டிருந்தது.
ஊரின் பற்றால் நாங்கள் அங்கு வாழ்ந்தோமே தவிர அங்கு எமது வாழ்வாதார நிலங்கள் அனைத்துமே பறிக்கப்பட்டது. எங்கள் நிலங்களை பறிப்பதற்காகவே மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டது.
அந்த குள காணிகளை விடுவிப்பதற்கு அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பல முயற்சிகளை எடுத்த போது மகாவலி அதிகார சபை விட்டுத்தர ஒப்புக் கொண்டிருந்த போதும் அப்போதிருந்த அரச அதிபரின் அக்கறையில்லாத செயல்பாட்டால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
அப்போது அக்கறையுடன் செயல்பட்டு இருந்தால் ஒரு குளத்தையாவது மீட்டிருக்க முடியும். கிவுல் ஓயா என்று எங்கள் காணிகள் அனைத்தும் பிடிக்கப்பட்டால் எங்கள் காணியை விட்டு நாங்கள் முற்று முழுதாக வெளியேற கூடிய நிலை உருவாகும்.
கிவுல் ஓயா
எல்லோருக்குமே கிவுல் ஓயா என்ற பெயரை மட்டுமே தெரியும். அங்கு நடைபெறுகின்ற விடயங்கள் மிக மோசமாக காணப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தொடர்ச்சியான முயற்சியால் நாங்கள் இன்று வரை அந்த கிராமத்தில் வாழக்கூடிய சூழல் இருக்கிறது.
கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிச்சயமாக நாம் அங்கிருந்து பிரயோசனமில்லை. கிவுல் ஓயாத் திட்டத்தின்படி மின் வேலி அமைக்கிறார்கள்.
அந்த மின் வேலி அமைத்தால் எமது முக்கிய வா ழ்வாதாரமான கால்நடைகள் பாதிக்கப்படும். மாடு அங்காலே செல்ல முடியாது. மழையை நம்பியே நாங்கள் விவசாயம் செய்கிறோம்.
விவசாய நிலங்களிலே எந்த அபிவிருத்தியையோ செய்துதர மகாவலி அதிகார சபை ஏற்றுக்கொள்ளாது. அரச உத்தியோகத்தர்களுக்கு விருப்பு இருந்தா லும் மகாவலி அதிகார சபையின் தலையீட்டால் அபிவிருத்தி செய்யப்படுவதில்லை.
பிரதேச செயலாளரால் எங்களுக்கான காணிக்குரிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது. அந்த பத்திரங்களின் உறுதியை தரலாம் என்று பொய் சாட்டு சொல்லி மீளவும் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இன்று வரைஅந்த அனுமதி பத்திரங்கள் திரும்பி வழங்கப்படவில்லை. அதனை மகாவலியுடன் இணைத்து நாயாற்றுக்கு அங்காலே உள்ள மக்களை முற்றுமுழுதாக வெளியேற்றுவது அவர்களின் நோக்கம்” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |