வட்டுக்கோட்டையில் தொடரும் சாதிய வன்முறை- பொறுத்துக்கொள்ள முடியாது பொங்கியெழுந்த மக்கள்!
வட்டுக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில், வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் ஒருவரது அவயம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆகவே தாக்குதல் நடத்திய மிகுதிப்பேரையும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
1. வட்டுக்கோட்டையில் இடம்பெறும் சாதிய வன்முறைகளுக்கு எதிராக அரசு சட்டரீதியான நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
2.வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில் முதியவர்களுக்கு எதிராக வாள்வெட்டில் ஈடுபட்ட மிகுதி நபர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
3.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் சாதிய வன்முறைகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் ஊடாக மனித சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வன்முறை கும்பல் மூளாய், பொன்னாலை, அராலி, முதலியார் கோவில், துணைவி போன்ற அனைத்து பகுதிகளிலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு எதிரான முறைப்படியான சட்ட நடவடிக்கைக்கள் எவையும் இதுவரை சரியாக மேற்கொள்ளப்படவில்லை.
அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகளை சேகரிப்பதற்காக வருவார்கள், தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். இப்படியான பிரச்சினைகள் ஏற்படும்போது வந்து எதுவும் எமக்கான நியாயத்திற்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.
தமிழ் தேசியம் என்று பேசுகின்றவர்கள் முதலில் எமக்கான தீர்வினைப் பெற்றுத் தந்துவிட்டு தமிழ் தேசியம் பற்றி பேசட்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி சமன் குணதிலக தெரிவிக்கையில்,
மக்களது அமைதி வழியிலான பேரணிக்கு நாங்கள் எந்தவிதத்திலும் இடையூறு செய்யப்போவதில்லை. நீங்கள் தாராளமாக உங்களது போராட்டத்தினை முன்னெடுக்கலாம். நாங்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவாறே இருக்கின்றோம்.
ஆனால் இச் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மறைந்துள்ளார்கள். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாகத் தான் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மூத்த காவல்துறை அதிகாரி ஜனக கருணசிங்க மற்றும் வட்டுக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி சமன் குணதிலக ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் அவர்களை கைது செய்வதாக போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வட்டுக்கோட்டை காவல்துறையினருடன் யாழ். காவல் நிலையத்தின் சிறப்பு குழுக்கள் இரண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சில அரசியல்வாதிகளின் தூண்டுதலில் வட்டுக்கோட்டை பகுதியில் மீண்டும் சாதி கலாசாரம் தலைதூக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மாதம் வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற அரசியல் தொடர்பில் இன்று வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்ய வலியுறுத்துமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் கையளித்தனர். வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில் அண்மையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.
சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் வட்டுக்கோட்டையில் சாதி கலாச்சாரம் ஆரம்பித்துள்ளது என்றே கூற வேண்டும். எனினும் குறித்த விடயத்தை நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்த அப்பகுதி மக்கள், தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாக மக்கள் தெரிவித்தனர்