பேராதனை பல்கலையில் வெடித்தது சர்ச்சை! பதிவாளர், பொறியியலாளர் உட்பட மூவர் பணி நீக்கம்
பேராதனை பல்கலைக்கழக பதிவாளர் உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக அலுவலக நேரங்களில் பல்கலைக்கழக ஊழியர்களை குறித்த பணியில் ஈடுபடுத்தியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் கண்காணிப்பாளரையும் பணிநீக்கம் செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக பதிவாளரின் வீட்டை பழுதுபார்ப்பதற்காக தமது அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உபகரணங்களைப் பெற்றதாகவும் நிர்வாக குழு குற்றம் சாட்டியுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் வீட்டில் வேலைக்கு வந்த மேலும் ஐந்து சிறு ஊழியர்களிடமும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.