பிரித்தானிய GCSE கல்வியில் தமிழை பாடமாக்க திட்டம்! மனுவில் ஒப்பமிடக்கோரும் ஆளும்கட்சி எம்.பிக்கள்
பிரித்தானியாவின் கல்வி பொதுத் தராதர (GCSE) பரீட்சையில் தமிழும் ஒரு பாடமாக உள்ளடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உமா குமரனும், கரத் தோமசும் முன்வைத்து அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் உயர்கல்வி பரீட்சை அமைப்புகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்த மேற்கு ஹாரோ நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தோமஸ் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினரும்; ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமா குமரனும் இதற்கான புதிய கூட்டு பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மேலும் உலகளவில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதாகவும் ஹரோ மற்றும் கிழக்கு லண்டன் பகுதிகளில் மிகப்பெரிய தமிழ் பேசும் சமூகம் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய பரீட்சையில் தமிழ்
இந்த நிலையில் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான இளையோர்கள் வீட்டிலும், உள்ளூர் சமூக அமைப்புகளிலும் தமிழைப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது, இங்கிலாந்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழில் க.பொ.த பரீட்சை இல்லையெனவும் தமிழில் கேம்பிரிட்ஜ் சர்வதேச ஐ.ஜி.சி.எஸ்.ஈ (iGCSE) தரநிலை இருந்தாலும் அது தேசிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லையென்பதால் பிரித்தானியாவில் தேசிய பரீட்சையில் தமிழ் அங்கீகரிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த பரப்புரையில் தமிழ் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் இணைந்து இதற்குரிய மனுவில் ஒப்பமிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மனுவை https://gareththomas.org.uk/petition-calling-for-a-gcse-in-tamil/ என்ற இணைய முகவரி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |