பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல்...! பொதுச்சுகாதார பரிசோதகர் கைது
கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் உள்ள மாணவகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரி வாக்குமூலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31-08-2026) கல்முனைத் தலைமையக காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
சுகாதாரப் பரிசோதனை
குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |