பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதி ஒன்றை முடிவு செய்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிள்ளையான் தாக்கல் செய்த குறித்த மனுவை ஜூன் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதிவாதிகள்
அத்துடன், மனுவில், சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டியின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முத்துமாலி, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது ஏப்ரல் 8 ஆம் திகதி அங்கு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாக மனுதாரரான பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஏப்ரல் 12 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க, விசாரணைக்காக அவரை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
