சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை - சீனா கூட்டு முயற்சி - பிரதமரின் வலியுறுத்தல்
"இந்த தசாப்தம் ஆசியாவின் தசாப்தம் எனவும், இதனால் இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மற்றும் சீனா இணைந்தே மேற்கொள்ள வேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.
சீனாவின் வர்த்தக அமைச்சு மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்திய ஏழாவது சீனா-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதில் சீன சுற்றுலாப்பயணிகள் பெரும் பங்காற்றியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன அரசாங்கத்திற்கு நன்றி

சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ள ஏதுவான சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையை சீன சுற்றுலாப்பயணிகள் இணைத்தமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டின் (2022) ஜுலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் 1,850 சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் இந்த வருடத்தின் ஜுலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28,000 இற்கும் அதிகமான சீன சுற்றுலாப்பயணிகளை இலங்கை வருகைதந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகமான வருமானம்

இதன் வாயிலாக, ஜூலை மாத இறுதியில் சிறிலங்கா அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை இலங்கையின் சுற்றுலாத்துறையினால் ஈட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் சீனா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவி சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.