“போராட வீதிக்கு இறங்குவது சட்டவிரோதம்” அரச தரப்பு அதிரடி
போராட்டம் தலைதூக்கினால் நாட்டை முன்னேற்ற முடியாது என்கிறார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S. B. Dissanayake).
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த எஸ்.பி.திஸாநாயக்க, சம்பளம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் அரசாங்கம் இடமளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
“தற்போதைய நிலையில் சம்பளத்தை எத்தரப்பினருக்கும் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை குறைக்கத் தான் வேண்டும்.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் செல்வந்த நாடுகளே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை. அந்நாட்டு மக்களும் சம்பள அதிகரிப்பிற்காக வீதிக்கிறங்கி போராடவுமில்லை.
தற்போதைய சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயற்பாடாக கருதி போராட்டங்களை முடக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.