யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை
வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கில் மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் நடப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் பதிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.

குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
காவல்துறையின் அவசர உதவி
பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தைப் விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |