வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை: பல கோணங்களில் விசாரணை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை அரசியல் காரணத்திற்காக நடந்ததா அல்லது தனிநபர் காரணத்திற்காக நடந்ததா என்பது விசாரணையை பாதிக்காது என காவல்துறை ஊடக பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றையதினம் (22.10.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை தொடர்பாக தகவலறிந்த எவரும் காவல்துறையினரை தொடர்புகொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு காவல்துறை குழுக்கள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த நான்கு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி நான்கு முறை சுட்டு இந்த கொலையை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நீதி விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் எவரும் காவல்துறையினரை தொடர்புகொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
