இந்த இளைஞனை தாங்கள் கொலைசெய்யவில்லையாம்: சிறிலங்கா காவல்துறை!
சிறிலங்காவின் அரசதலைவரின் மிரிஹானை வீட்டின் முன்பாக பொதுமக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, சிறிலங்கா காவல்துறையினரின் முன்பு நின்று துணிவாகப் பேசிய அந்த இஞைன் பற்றி பல செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அந்த இளைஞன் சிறிலங்கா காவல்துறையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டதாகவும், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையின் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வந்தன.
சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும், குறிப்பிட்ட அந்த இளைஞன் உயிருடன் இருப்பதாகவும் தற்பொழுது சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
மிரிஹானை ஆர்ப்பாட்டத்தின் போது தம்மால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்தனை பேரும் உயிருடன் இருப்பதாகவும், யாரும் மரணமடையவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறை சற்று முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.