திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் உரிமை பறிப்புக்கு எதிராக அறவழியில் எழுச்சி கொள்வோம் - விடுக்கப்பட்ட அறைகூவல்
தமிழ் பேசும் மக்களே! பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான அறவழி எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.திட்டமிட்ட இன அழிப்பு,கலாசார அழிப்பு,காணி அபகரிப்பு,உரிமை பறிப்பு,ஜனாசா எரிப்பு போன்ற அநாகரிக,அடிப்படைவாத,வக்கிரமான அரச செயற்பாடுகளை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.
சிறிநேசன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ்பேசும் மக்களே நாம் மதத்தால் இந்துவாகவோ,மாண்புறு முஸலிமாகவோ,வேதம் பயிலும் கிறிஸ்தவனாகவோ இருக்கலாம்.
ஆனால் மொழியால் நாம் தமிழ் பேசும் உறவுகள் ஆவோம்.அதேவேளை வடக்கு,கிழக்கு,மலையகம் சார்ந்து வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள் எனபதை அறிவோம். ஆனால் துரதிஸ்டவசமாக நாம் 26% இந்நாட்டில் வாழ்வதால்,74%ஆன சிங்கள மக்ளின் வாக்க்குகளைப் பெறுகின்ற பேரினவாதிகள் எமது உயிர்,உடைமை,உரிமை,கலாசாரச் சான்றுகள்,காணிகள் அனைத்தையும் கட்டம் கட்டமாகப் பறித்தார்கள்,பறிக்கிறார்கள்.தொல்லியல்,வனசீவராசிகள்,வனவளப்பாதுகாப்பு,பௌத்தசாசனம்,மகாவலி அபிவிருத்தி அமைச்சுகள்,திணைக்களங்கள்,அதிகாரசபைகள் என்பன இன்று சட்டங்கள்,சம்பிரதாயங்கள்,நெறிமுறைகள்,மனித வழுமியங்களுக்கு அப்பால் சென்று தமிழ்பேசும் மக்களின் காணிகளைக் கையகப்படுத்துவதிலும்,கலாசாரச் சான்றுகளை அகற்றுவதிலும்,அழிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன.
தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் என்ற போர்வையில் தமிழ் பேசுனரின் காலாசாரங்களை சிதைப்பதும்,பௌத்தமயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும் தொல்லியல் இடங்கள்,புனித பூமி,பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் தமிழ் பேசுவோரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
அயல் மாவட்டச் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.கொவிட் தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிங்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் ஜனநாயகரீதியாகவும்,சட்டரீதியாகவும்,அஹிம்சை ரீதியாகவும் எதிர்க்க வேண்டியதும்,தடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. பதவிகளுக்காகப் பேரினவாத அரசிடம் சோரமாகிய சரணாகதித் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பதைவிட,தமது பதவிகளைப் பாதுகாப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
இவர்கள் மக்களையோ,மண்ணையோ பாதுகாக்க மாட்டார்கள்.
ஆகவே தமிழ் பேசும் மக்களே! பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான அறவழி எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.திட்டமிட்ட இன அழிப்பு,கலாசார அழிப்பு,காணி அபகரிப்பு,உரிமைப் பறிப்பு,ஜனாசா எரிப்பு போன்ற அநாகரிக,அடிப்படைவாத,வக்கிரமான அரச செயற்பாடுகளை எதிர்ப்போம்,தடுப்போம்,முறியடிப்போம்....
‘’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’’எனத் தெரிவித்துள்ளர்.