சிவகுமாரனின் நினைவேந்தலில் காவல்துறை அச்சுறுத்தல் (படங்கள்)
சிவகுமாரனின் நினைவேந்தலில் காவல்துறை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு தினத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடாத்திய நிலையில் அங்குவந்த காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகள் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டது.
இந்த நினைவு தினம் நிறைவுபெற்ற வேளையில், அங்கு வந்த வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் குறித்த நிகழ்வுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நிகழ்வில் நின்றவர்களையும் கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவுசெய்தனர்.
காவல்துறையினருடன் வாய்த்தர்க்கம்
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் இ.சத்தியசீலன் ஆகியோர் காவல்துறையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் நினைவுகூரப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இதன்போது காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர் எந்த விடுதலை இயக்கத்தினைச் சேர்ந்தவரும் இல்லையெனவும் அவர் மாணவர் ஒன்றியத் தலைவராக செயற்பட்டு தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் எனவும் இதன்போது காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் யாழில் உயிரிழந்த ஒருவரை இங்கு ஏன் அனுஷ்டிக்கின்றீர்கள் என்ற கேள்விகளை கேட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஊடகவியலாளர்களிடமும் நீங்கள் யாரை அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியும் காவல்துறையினரால் கேட்கப்பட்டது.
இதன்போது, தாம் தனியொரு கட்சியெனவும் உயிரிழந்த ஒருவரை நினைவுகூரும் உரிமையுள்ளது எனவும் அதனை யாரும் தடுக்கமுடியாது எனவும் இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். பின் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.