பூநகரி கடலட்டை தொழிற்சாலை - பணிப்பாளர்களாக சீனர்கள் உள்ளமை அம்பலம்
பூநகரி கௌதாரிமுனையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்களையும் பணிப்பாளர்களாக உள்ளடக்கி இலங்கை கம்பனி பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குயிலன் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கடலட்டை நிறுவனத்தின் 3 பணிப்பாளர்களில் ஒருவராக நீர்கொழும்பைச் சேர்ந்த தம்மிக்க டி சில்வா என்பவரது பெயர் பதிவாகியுள்ளது.ஏனைய இருவரும் சிச்சாவே லீ மற்றும் யுவான் சென் ஆகிய சீனர்களாவர்.
இவர்களின் வதிவிட முகவரியும் ஒப்பந்தத்தில் சீனா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனப் பதிவு ஒப்பந்தம் கடல் தொழில் சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை அமைக்கத் தேவையான பரப்பளவு, கொடுப்பனவுகள், பங்குதாரர்களுக்கு இடையிலான பங்கீடுகள் என்பன குறித்தும் இந்தத் தொழிற்சாலை பதிவு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
