தபால் திணைக்களத்தின் வருமான இலக்கு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் அலுவலகத்தை நேற்று (22) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருடம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்ட முடியும்.
மத்திய தபால் பரிமாற்றகம்
தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக, மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு 209 பாதுகாப்பு கமராக்களை கொள்வனவு செய்ய 27 மில்லியன் ரூபாவும், 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டெப் கணினிகளை கொள்வனவு செய்ய 101 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, பொலன்னறுவை, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகம் ஆகியவற்றில் 24 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலன்னறுவை தபால் தொகுதியில் அந்தப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
அத்துடன், 31 மில்லியன் ரூபாய் செலவில் தபால் அலுவலகங்களுக்கு 657 விரல் அடையாள இயந்திரங்களை கொள்வனவு செய்யவும் தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |