விடுதலைப் புலிகளின் தலைவரது கோரிக்கையை நிராகரித்த நாமா இதனை ஏற்பது? கோட்டாபய அரசிடம் கேள்விக்கணை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த நாம் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளுடன் எவ்வித முரண்பாடுகளையும் தோற்றுவிக்காத வகையில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டுமென அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட போது துறைமுக நகரம் தொடர்பான பாதகமான கொள்கைகளை மாற்றியமைப்போம் என உறுதியளித்தோம்.
அதன் விளைவாக அபிவிருத்தித் திட்டத்தின் அமுலாக்கத்தில் தாமதமேற்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவ்வாறு இருப்பினும் கூட துறைமுக நகரத்தின் உரிமை சீனாவிடம் கையளிக்கப்படுவதை நிறுத்தி 99 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கினோம்.
அது மாத்திரமன்றி மிக முக்கியமாக துறைமுக நகரத்தின் இடத்தை மேல் மாகாணத்திற்கு உட்பட்ட கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓரங்கமாகவும், அரசாங்கத்திற்குரிய இடமாகவும் பிரகடனப்படுத்தினோம்.
எனினும் தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தில் நாட்டிற்கு கேடானது பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள குறிப்பாக களியாட்ட விடுதிகள், கசினோ, போன்றவற்றுக்கு துறைமுக நகரத்திற்குள் அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பு துறைமுகநகர அபிவிருத்தித் திட்டம் சீர்குலைய வேண்டும் என்று நாம் ஒருபோதும் விருப்பப்படமாட்டோம் எனினும் எமது நாட்டின் வெளிவிவகார கொள்கைகளுடன் எவ்வித முரண்பாடுகளையும் தோற்றுவிக்காத வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை தொடரந்து இலங்கை சீனாவின் காலனித்துவக நாடாக மாறப்போகின்றதா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
தனிநாட்டைக் கோரிய பிரபாகரனின் கோரிக்கையை நிராகரித்த நாம் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா? என கேள்வி எழுப்பினார்.