வைத்தியர்களின் சம்பள உயர்விற்கு அதிபர் இணக்கம் - ஹரித அலுத்கே
சம்பளப் பிரச்சினை காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கெதிரான அநீதி

இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளியைப் பார்ப்பதற்காக வைத்தியருக்கு 28 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளியை கிளினிக்கில் பார்க்க சுமார் 36 ரூபாயே வழங்கப்படுகிறது.
பயிற்சி வைத்தியர்கள் இன்னும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்.
இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர்.
அதனை சரிசெய்வதற்காக அனைத்தையும் மீளாய்வு செய்து நிதியமைச்சுடன் பேசி, எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இது தொடர்பான முதல் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் வைத்தியர்களு்கான சம்பள முறையை உருவாக்குவது அவசியம்” என்றார்.