மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்
நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
சுகாதார அமைச்சு
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு, கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.

இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு, விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவ மனையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |