பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகப் பாரதூரமானது! சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தங்களுக்குரிய ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பலவீனங்களை நிவர்த்தி செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் "மிகப் பாரதூரமானது மற்றும் காலாவதியானது" என்றும் அது இரத்துச் செய்யப்படுவதோடு மாத்திரம் அன்றி மறுசீரமைக்கப்படலும் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், விசாரணையின்றி நீண்டகால காவலில் வைத்தல், 48 மணி நேரத்திற்குள் நீதவான் முன் நிறுத்தப்படாமை, பிணை மறுப்பு, காவல்துறை உத்தியோகத்தரிடம் வழங்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுப்புகளுக்கு வழிவகுக்கிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயங்கரவாதத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமன்றி, அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களைத் துன்புறுத்தவும் பயன்படுகிறது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை அவர்களில் எவரும் சுட்டிக்காட்டவில்லை.
மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது சட்ட நடவடிக்கைகளால் அரசியலமைப்பிற்கு அப்பால் அரசாங்க எதிர்ப்புக் கலவரங்களை தடுப்பதன் அடிப்படையில் பலியாக்கப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் சுதந்திரமான நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். பிரிவினை, சுரண்டல், அபிவிருத்தியிலிருந்து ஒதுக்கப்படுதல், அரசியல் ரீதியாக பலப்படுத்தல் மேற்கொள்ளப்படாமை போன்ற பயங்கரவாதத்திற்கான அடிப்படைக் காரணங்களாகும்.
சகோதரத்துவம், சகவாழ்வு மற்றும் பிரிவினை மற்றும் இனவாதத்தை ஒழிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை அடைய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
