அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதிகள்: சபையில் உறுதியளித்த அநுர
மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.
இதன்படி, மனித உரிமைகள் மீறப்படுவதை தடுப்பதற்கு, முக்கிய சட்ட சீர்திருத்தங்களும், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எங்கள் நிலைப்பாடு தெளிவானது. பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) ரத்து செய்யப்பட வேண்டும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Bill) திருத்தப்பட வேண்டும் மற்றும் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இதுவரை தீர்க்கப்படாத கொலை வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்,” என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.
வழக்குகளுக்கான விசாரணைகள்
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் எடுத்துக்கொண்ட மூன்று முக்கியமான மனித உரிமை தொடர்பான உறுதிமொழிகளான பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் மற்றும் தீர்வில்லாத கொலை வழக்குகளுக்கான விசாரணைகள், குறித்து சர்வதேசம் மற்றும் உள்ளூர் சமூகத்தால் அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும், சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அரசு அறிந்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வகைத் தீய செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
