சிறிலங்காவில் ஆயுதமாக பயன்படும் பயங்கரவாத தடைச்சட்டம் - மனித உரிமைச் செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு
வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்துவந்த சிறிலங்கா அரசுகளால் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது உரிய நடைமுறைகள் எப்போதும் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கைது செய்யப்படும் ஒருவரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல், 18 மாதங்கள் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கம் குறித்து அமெரிக்க காங்கிரஸில் விவாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும், இலங்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் அழைக்கப்பட்டிருந்ததார்.
இதற்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தின் காணப்படும் பாரதூரமான விடயங்கள் குறித்து தனது விளக்க உரையில் அம்பிகா சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படுவதில்லை என்பதால், சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் கைதுகள் தன்னிச்சையானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணையின் போது உதவிக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்ட வாக்கு மூலத்தை ஆதாரமாக காட்டுவதற்கும் இந்தச்சட்டம் அனுமதிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறைச்சாலைகள் பற்றிய ஆய்வின் படி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 வீதமான ஆண்கள், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறியதாகவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்குத் தெரியாத சிங்கள மொழியில் இருந்த வாக்குமூலங்களிலேயே தாம் கையொப்பமிட்டதாக சித்திரவதைக்கு ஆளானவர்களில் 90 வீதமானவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ, நிகழ்வுகளில் பேசுவதையோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குவதையோ தடுக்க பயங்கரவாத தடுப்பு சட்ட விதிகள் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட பின்னரும் கூட, ஒருவரின் தடுப்புக்காவல் இடத்தைத் தீர்மானிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை இந்தச்சட்டம் அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்க்கும் போர்வையில், குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
