முற்றியது விவகாரம்! கனடாவில் அவசரநிலை பிரகடனம் (படங்கள்)
பாரவூர்தி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கனடா அரசாங்கம் உத்தரவிட்டமைக்கு பாரவூர்தி சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடா அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாரவூர்தி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரவூர்தி சாரதிகள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய வீதிகளில் பாரவூர்திகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் வீதிகளில் கிரிக்கெட், கொக்கி விளையாட்டுகளும் விளையாடுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஒட்டாவா (Ottawa) மேயர் ஜிம் வாட்சன் (Jim Watson) கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவலானது. தலைநகரில் உள்ள காவல்துறையினரை விட போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.
இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். இதற்கிடையே பாரவூர்தி சாரதிகளின் போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.