கோட்டாபயவின் கொடும்பாவி நடுவீதியில் எரிப்பு - ஹட்டனில் கிளர்ந்தெழுந்த மக்கள் (படங்கள்)
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட ஏ. அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹட்டனில் இன்று (21) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமாரின் உருவப்பொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக மறுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. ஹட்டன் ஸ்டிரதன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த, பெருந்தோட்ட மக்கள் இன்று தொழிலுக்குச் செல்லாது, இப்போராட்டத்தை முன்னெத்துள்ளனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் குவிந்த மக்கள், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, தமது உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தினர்.