தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
மருந்து தட்டுப்பாடு மற்றும், சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதார துறையினை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த இப் போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதிவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, மருந்து மற்றும் சத்திரசிகிச்சைக்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இருப்பதைக்கொண்டு மக்களிற்கு சேவையை வழங்கி வருகின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
சிக்கனமாக பயன்படுத்துகின்றோம். இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.