நாட்டுக்கு சோறு போடுவது நாங்கள், விலையை தீர்மானிப்பது நீங்களா..! வவுணதீவில் போராட்டத்தில் இறங்கிய கமக்கார அமைப்புக்கள்
தொடர்ச்சியாக இன்றுடன் எட்டு நாட்களாக அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு வவுணதீவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (22) காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு வவுணதீவில் பிரதேச செயலகத்தில் விவசாய கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கமக்கார அமைப்பு
இந்நிலையில் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஒரு நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இதன் போது பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்காதே, பண்ணையாளர்கள் கால்நடைகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது, நாட்டுக்கு சோறு போடுவது நாங்கள், விலையை தீர்மானிப்பது நீங்களா?" என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
